தமிழ் மன்றத்தின் தலைவர் கார்த்திக் அவர்களுடன் ஓர் உரையாடல்:
வணக்கம்,நான் கார்த்திக், தமிழ் மன்றம் மாணவர் அணித் தலைவன்.
1. எம்.ஐ.டி தமிழ் மன்றம் எப்போது தொடங்கப்பட்டது ?
நம் மன்றமானது இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. மூத்தவர்கள்(seniors) விஜயகுமார் அவர் நண்பர்கள் இருவரோடு கலந்து உரையாடி மன்றம் ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டனர். சென்ற வருடம் தான் மூத்தவர்கள் (seniors) ஆஷிக், கவுஷிக், அஜய், கீர்த்தனா மற்றும் ஐந்து ஆறு பேர் சேர்ந்து கல்லூரித் தலைவரிடம் (Dean) பேசி, அவரின் அனுமதி பெற்று, இதற்கென ஆசிரிய அமைப்பாளர் (Staff organiser) வைத்து மன்றம் முறையாக தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாய் தொடர்ந்து இயங்கி வருகிறது.
2. மன்றத்தின் முக்கிய நோக்கம் என்ன?
தாய்மொழி வழி சமூக முன்னேற்றம், இதுவே மன்றத்தின் நோக்கம். ஆங்கிலத்தில் பேசுவதென்பது கடினமாய் உள்ளது. மாணவர்கள் தாங்கள் நினைப்பதை தமிழில் பேச வேண்டும்; மேடையில் பேசுவது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். அதுவே அவர்கள் ஆங்கிலத்தில் பேசவும் உறுதுணை புரியும். தற்காலம் நம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது மற்றும் அந்த பிரச்சினைகளை பற்றி அனைவரிடமும் தெரியப்படுத்துவது, எழுதும் ஆற்றல் உடையவர்களை ஒன்று சேர்ப்பது ஆகிய இவை எல்லாம் சேர்ந்தது தான் தமிழ் மன்றத்தின் முழு நோக்கம் ஆகும்.
3. இந்த பருவத்தில் தங்களின் செயல்பாடுகள் என்னென்ன?
இந்த பருவத்தில் ஐந்து குழுக்களாய் பிரிந்து செயலாற்றி உள்ளோம். சமூக ஆய்வரங்க குழு- வாரந்தோறும் ஒரு தலைப்பில் பட்டிமன்றம் (குழு விவாதம்) நடத்தப்படுகிறது.
இலக்கிய குழு- கதை, கவிதை எழுதும் மாணவர்களை ஒன்றிணைத்து எழுத்துப் பட்டறை நடத்தி அவர்கள் தங்களை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கலைக் குழு-வாரந்தோறும் 4-5 நாட்கள் சிலம்பம் கற்றுத் தரப்படுகிறது. இதற்கு இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவன் பொறுப்பெடுத்துக் கொண்டு கற்றுத் தருகிறான்.
தொழில்நுட்பக் குழு-மன்றத்தின் முகநூல் பக்கத்தை நடத்தி வருகின்றனர்.
4. வரும் காலங்களில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?
அடுத்த பருவத்தில் இந்த செயல்பாடுகள் தொடரும். மேலும் சென்ற ஆண்டு “தமிழ் கலாச்சார திருவிழா” பிற கல்லூரி மாணவர்களுக்காக நடத்தினோம். அதை வரும் பருவத்திலும் நடத்தவிருக்கிறோம். நிறைய மாணவர்களை எங்கள் திட்டங்களில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டு கொண்டு வருகிறோம்.
5. மாணவர்கள் ஏன் தமிழ் மன்றத்தில் இணைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
மாணவர்கள் ஏன் தமிழ் மன்றத்தில் இணைய வேண்டும் என்றால் தமிழில் பேசுவதை மேம்படுத்திக் கொள்ளவும், மேலும் தற்சமயம் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவான புரிதல் பெறவும் அது குறித்து விவாதிக்கவும் விரும்புபவர்கள் மன்றத்தில் இணையலாம்.
6. எதாவது விமர்சனங்களை மன்றம் பெற்றதுண்டா ?
இது வரை எந்த விமர்சனங்களும் பெற்றதில்லை. ஆசிரிய சமூகத்திடம் இருந்து ஆதரவு தான் பெற்றிருக்கிறோம். மாணவர்கள் மத்தியிலும் மன்றத்தின் கண் ஆதரவே உள்ளது.
7.குழுவாக நீங்கள் பணியாற்றும் போது எதாவது வேடிக்கையான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா? பதில் ஆம் எனில் எங்களுடன் பகிரவும்.
வேடிக்கையான சம்பவங்கள் என்று பார்த்தால், கல்லூரித் தலைவரிடம் பேசும் போது ‘என்ன தமிழ் மன்றம் என்று நீங்கள் செயல்படாமல் உள்ளீர்களே’ என்று ஒரு முறை கேட்டார். ஆனால் மன்றத்திற்கு தேவைப்படும் பண உதவிகளை அவர் வழங்க தவறியதில்லை. எதாவது நிதி உதவி என்றால் கேளுங்கள் செய்கிறேன் என்பார். மன்ற துவக்க விழாவிற்கு அவர் நிதி வழங்குவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. துவக்க விழாவிற்கு இவ்வாறாக கடுமையாக உழைத்த பின்னர் தமிழ் மன்ற இதழ் வெளியிட மறந்து விட்டோம்.
8.எங்களுடன் தாங்கள் பகிர விரும்பும் வேறு சில தகவல்கள் ?
தமிழ் மன்றம், கல்லூரியிலுள்ள மற்ற அமைப்புகள் போல் அல்ல. இதை மற்ற அமைப்புகளோடு ஒப்பிடாமல், இதற்கு தேவையான ஆதரவை அனைவரும் வழங்க வேண்டும்.
அத்தினீயம் மற்றும் தமிழ் மன்றம் இணைந்து சென்ற வருடம் MITAFEST இல் “தமிழ் கலாச்சாரத் திருவிழா” நடத்தினோம். இதில் 15 கல்லூரிகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர். கதை, கட்டூரை, ஓவியம், கரகம் சிலம்பம் போன்ற தனித்திறன் போட்டிகள் நடத்தினோம். அன்று ஒரு நாள் முழுவதும் தமிழ் மன்றம் பொறுப்பெடுத்துக் கொண்டு செயலாற்றினோம்.
Interviewed by: Bhaskar Monica, second year, Production Technology.